Saturday, 31 August 2013

பதிவர் சந்திப்பு : பிரபல பதிவர்கள்-- புதிய பதிவர்கள் என்ன நடக்கிறது??

இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது. பிரபல பதிவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் புதிய பதிவர்கள் அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்பதைப்போல் வெங்காயம்,வெள்ளைப்பூண்டு(இரண்டும் இந்திய பொருளாதாரத்துடன் மிக நெருக்கம்) என்று பதிவுகளை போட்டு வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் தமிழ்மணம் பக்கம் சென்று பார்த்தால் காம்ரேட் ஆரூர் மூனா செந்தில் ,கனவுகள் ராஜி, தென்றல்” சசிகலா,தமிழ்வாசி” பிரகாஷ், டிடி,வீடு திரும்பல்” மோகன்குமார்,கவிதை வீதி”சௌந்தர்,மதுமதி,கோவை நேரம்”ஜீவா,சுரேஷ்,சங்கவி,(விட்டுப்போனவர்கள் மன்னிக்கவும்... முடியல!) போன்ற பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு பற்றி பல விலாவாரியான பதிவுகளை எழுதி தள்ளிவிட்டனர். ஆனால் புதியவர்களிடம் சொற்பமான பதிவுகளே பதிவர் சந்திப்பு பற்றி வந்திருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரியம் "நாம் புதியவர்கள்" என்ற எண்ணம் தான் என்று நினைக்கிறேன்.  எனவே அதை தூக்கி குப்பை வண்டியில் எறிந்துவிட்டு நாமும் களத்தில் இறங்குவோம்.எதற்காக சொல்கிறேன் என்றால் , ஒருவேளை பதிவுலக வாசகர்களின் கெட்ட நேரம் நாமும் பிரபல பதிவர் ஆகிவிட்டால், "நீ என்ன பிரபல பதிவர், பதிவர் சந்திப்பு பற்றி ஒரு வரியாவது எழுதுனியா? இல்லை என்னைத்தான் பதிவர் சந்திப்புக்கு வர சொன்னியா என்று யாரவாது கேள்வி கேட்டால் "சரிங்க சித்தப்பு இனிமே உங்கள எங்க கண்டாலும் கூப்புடுரேன் -னு" சமாளிக்க வேண்டியதில்லை.எப்படியும் சில வயித்தெரிச்சல் புடிச்சவங்க இந்த சந்திப்பு முடிஞ்சதும் "பதிவர் சந்திப்பு தேவையா? ... பன்னிகுட்டி தேவையா னு " பதிகளை போடத்தான் போறாங்க. அவங்களுக்கு பின்னூட்ட பதில் எழுதுவதற்கு சில விடயங்கள் தெரிஞ்சு வச்சுக்க வேண்டியது அவசியம்.

 சரி புதியவர்கள் என்ன பண்ணலாம். பதிவுகளை வாசிப்பவர்கள் அனைவரும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை அறிந்து வைத்துக்கொள்வது இல்லை. என் நண்பர் வட்டத்தில் பலருக்கு பதிவுலகமே அறிமுகம் ஆகி இருக்கவில்லை என் வலைப்பூ இணப்பை கொடுக்கும் வரை. எனவே பிரபல பதிவர்களின் பதிவர் சந்திப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை நம் வலைப்பூவில் இணைத்திடுவோம். இது இன்னும் இப்படி ஒரு எழுத்துலகம் இருக்கிறது, இங்கும் தரமான எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்பதை பலரும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதில் இன்னுமொரு நல்ல விடயம் சந்திப்புல கறிசோறு வேறு. சந்திப்புக்கு போகும் அல்லக்கையிடம் இரண்டு பாதிரம் கொடுத்து "ஒன்னு உனக்கு, ஒன்னு எனக்கு" என்று இந்த ஒரு நாள் நாமெல்லாம் "அன்னவேரி கண்ணையன்" ஆகலாம்...
எனக்கு பிடித்த இன்னொரு விடயம் பதிவர் சந்திப்பில் புத்தகங்கள் வெளியிடுவது. உதாரணத்திற்கு சாரு , ஜெ.மொ.. இவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் என்ன சொன்னாலும் சாமானியன் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அழிச்சாட்டியம் பண்ணுபவர்களுக்கு மத்தியில், இப்படி புதிய எழுத்துலகம் உருவாவது இந்த் நாசமாபோன கோஷ்டி பூசலை தடுக்க உதவும்.

பதிவர் சந்திப்பு பற்றிய செய்திகள்.
http://www.rahimgazzali.com/2013/08/blogger-meeting-2013.html,

"பதிவர் திருவிழா" திறம்பட ஒருங்கிணைத்து நடத்தும் அனைத்து பதிவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Monday, 12 August 2013

The Conjuring - இது சாதாரண திகில் படம் இல்லை...!

திகில் படங்களில் இரண்டு வகை, ஒன்று படுபயங்கர காட்சிகள், வெட்டு குத்து என திரையை ரத்தக்களரி செய்துவிடுவது. மற்றொன்று ஒலி, காட்சியைப்புகள் இவற்றை வைத்தே அடிவயிற்றை கலக்கும் படங்கள். சமீபத்தில் வெளிவந்த "The Conjuring" இரண்டாவது வகை.

Conjuring Image
 டிஸ்கவரி தமிழில் இரவு 11 மணிக்கு "ஹாண்ட்டிங்" என்று ஒரு திகில் தொடரை அவ்வப்பொழுது ஒளிபரப்புவார்கள். பல தொடர்களைப் பார்த்த தைரியத்திலும், எல்லாம் ஒரே கதைதானே என்றும் தெனாவட்டாக போய் உட்கார்ந்தால், வெளியே வரும்போது பேயறந்தது போல் ஆகிவிட்டது. நன்றாக தெரிந்த கதை தான்!. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பெரிய வீட்டை ஒரு அழகான குடும்பம் விலைக்கு வாங்குகிறது, அவர்கள் தங்களது அனைத்து சேமிப்பையும் அந்த வீட்டில் முதலீடு செய்திருப்பதால் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் போக முடியாத நிலை. அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை அழிக்க நினைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள். இந்த கதையை பல படங்களில் - "Excorcist" வகையரக்களில் பார்த்திருந்தாலும் "The Conjuring" வித்தியாசப்படுகிறது. ஐந்து குழந்தைகளுடன் ஒரு குடும்பம் ஃப்ளொரிடாவின் ஒதுக்குபுறத்தில் குடியேறுகிறது. நூறு வருடங்களுக்கு முன் அந்த வீட்டில் வாழ்த்த ஒரு பெண்(சூனியக்காரி) தன் கைக்குழந்தையை சமையலரை கத்தியால் கொன்று விட்டு , அந்த வீட்டிற்கு யார் குடிவந்தாலும் அவர்களை கொன்றுவிடுவதாக சாபமிட்டுவிட்டு தன் நிலத்திலுள்ள மரத்தில் தீயசக்திக்காக தன்னை பலியிட தூக்கில் தொங்கிவிடுகிறள். சில நாட்களில் அந்த வீட்டில் இருக்கும் அவளின் ஆவி ஒவ்வொரு குழந்தையாக தொல்லை கொடுக்கிறது. ஒரு சிறுமியிடம் உங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உடனே அவர்கள் தீயசக்திகளை விரட்டும் எட்வார்ட் தம்பதியின் துணையை நாடுகிறார்கள். அவர்கள் எப்படி அந்த தீயசக்தியை கண்டிபிடிக்கிறார்கள் , அந்த குடும்பத்தை காப்பாறுகிறார்கள் என்பதை (முடிந்தால்) திருட்டு விசிடி-யில் பார்க்காமல் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட படங்கள் வந்த் போதிலும்,"Conjuring " -ல் அட்டகாசமான திரைக்கதையும் எடுக்கப்பட்ட விதமும் இது சாதாரண படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. உதாரணமாக எட்வார்ட் இப்படி பல வீடுகளில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து சாபமிடப்பட்ட பொருட்களை தன் வீட்டு தரைத்தளத்தில் சேமித்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் "இப்படி சாபமிடப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டிலே வைத்திருக்கிறீர்களே" என்று கேட்பதற்கு அதற்கு அவர் சொல்லும்  விளக்கம் "நான் எல்லா துப்பாக்கிகளையும் ஒன்றாக வத்திருக்க விரும்புகிறேன், தனித்தனியே இருந்து அது பல உயிர்களை எடுக்காலாமல்லவா?". ஆவிகளை படம்பிடிக்க அனைத்து  அறைகளிலும் புகைப்படக்கருவிகளைப் பொருத்துவது, ஒலிகளை பதிவு செய்வது, இவற்றை ஆவனமாக்கி பாதிரியாரிடம் நிஜமாகவே அந்த வீட்டில் ஆவி உள்ளது, எனவே பேயோட்டும் நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டும் என கேட்பது ; அனுமதி கேட்கும் போது  பாதிரியார் அந்த குடும்பம் சர்ச்-ல் உறுப்பினர் இல்லையென்றும், குழந்தைகள் ஞானஸ்நானம் செய்யாததால் இதற்கு நேரிடையாக வாடிகன் தான் அனுமதி அளிக்க வேண்டும் என கூறுகிறார்,இப்படி சின்னச் சின்ன விசயங்களையும் கதையில் புகுத்தியுள்ளனர்.. ஒரு உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திகில் படங்களின் வரிசையில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Sunday, 28 July 2013

அமெரிக்கா உலகத்தையே ஒட்டுக் கேட்பதை தடுப்போம்

அமெரிக்காவுக்கு வயிற்று வலி, நாங்கள் மருந்து சாப்பிட வேண்டியிருந்ததால் பல நாட்களாக பதிவிட முடியவில்லை.சென்ற பதிவில் தனி நபர் தகவல்களை அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் திருடி தங்கள் சுய லாபங்களுக்காக உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தோம். இந்த தகவல் திருட்டை தடுக்க சில எளிய வழிமுறைகளைப் இப்பொழுது பார்க்கலாம். நேரிடையாக உள்ளே போவதற்குள் ஒரு சிறிய கதை.!
"தொலைவில் வசித்து வரும் இரண்டு நண்பர்கள் தினமும் இரவு அந்த நாளின் நிகழ்வுகளை தொலைபேசியில் பரிமாரிக்கொள்கிறார்கள். ஆனால் இருவரும் "உள்நாட்டுப்போர் நடந்து கொண்டிருக்கும் செழிப்பான"இரு நாட்டின் எல்லைகளில் வசிப்பதால் அடிக்கடி பேசிக்கொள்வது நாட்டின் அரசியல் விவகாரங்கள். அந்த நாடுகளின் இயற்கை வளத்தை கொள்ளையடிக்க உலக வல்லரசுகள் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டுருக்கின்றன; ராணுவத்தின் தகவல்களை அவ்வளவு சுலபமாக வல்லரசுகளால் படிக்க முடியவில்லை, காரணம் அவை சங்கேத மொழியில் இருப்பதும் பல அடுக்குகளாக அமைந்திருப்பதாலும். எனவே வல்லரசுகள் குறிப்பிட்ட அந்த இருவரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறார்கள்,முதலில் சில நாட்களுக்கு கொஞ்சம் உருப்படியான தகவல்கள் கிடைத்தன ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதில் ஒரு வெங்காயமும் கிடைக்கவில்லை.என்ன காரணம்?. முதலில் தங்களது வியுகங்கள் ஏதும் சரியாக பலனளிக்காமல் போனபோது, இரு நாட்டு ராணுவமும் தங்கள் எல்லையோர மக்களின் தொலைபேசி மற்றும் பிற தொழில்நுட்ப தகவல் தொடர்புகளை கண்காணிக்கும்போது வேறு நாடுகளின் இணைய முகவரிகளும் அந்த தகவல்களில் பெருநர் பகுதியில் இருந்தன. விழித்துக்கொண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் போது வேறு யாரோ இவர்களின் இணையத்தில் கொக்கியைப் போட்டு தகவல்களை திருடுவது தெரிந்தது. உடனே தங்கள் நாட்டின் அனைத்து மின்னனு தகவல்களையும் மறையீடு செய்துவிட்டனர். எனவே தான் தகவல்கள் கிடைத்தாலும் அதை வைத்து உருப்படியாக ஒரு செய்தியையும் அவர்களால் படிக்க/தெரிந்து கொள்ள முடியவில்லை"
தகவல் திருடுவதைத் தடுக்க முடியாவிட்டாலும் அதை புரியாத மொழியில் அதாவது சங்கேத வார்த்தைகளாவும், மறையீடும் செய்தால், திருடப்பட்டாலும் அதை வைத்து ஒன்றும் கிழிக்க முடியாது.ஒரு ராணுவம் சுலபமாக தகவல்களை மறையீடு செய்யும் தொழில்நுட்பத்தை வைத்திருக்க முடியும் ஆனால் சாதாரண மக்கள் எவ்வாறு மறையீடு செய்து தங்கள் தகவல்களை பாதுகாத்துக்கொள்வது?. இதற்கு பல தொழில்நுட்ப இணைய தளங்கள் தற்போது சேவையளிக்கத் தொடங்கியுள்ளன. அவற்றுள் முக்கியமான இரண்டு நிறுவனங்களை இப்போது பார்ப்போம்.
முதலில் "Silent Circle". அலைபேசி தகவல்களை மறையீடு செய்யும் சேவை அளிக்கும் இந்த நிறுவனம் , அலைபேசியிலிருந்து வெளியில் செல்லும் தகவல்களை பயனாளரின் தனிப்பட்ட மறையீட்டு குறிச்சொல்லை வைத்து செய்திகளை மறைத்து அனுப்புகிறது. நீங்களும், நீங்கள் தொடர்பு கொள்பவரும்  Silent Circle சேவையை உபயேகிக்கிறீர்கள்
எனில் இருவரது தகவல்களும் தங்களது தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படும். யாரேனும் ஒருவர் மட்டும் Silent Circle சேவையை உபயேகித்தால் கூட பயனாளரின் தகவல்கள் தனிப்பட்ட குறிச்சொல்லால் மறைத்து அனுப்பப்படுவதும்,அதே சமயம் உங்களுக்கு வரும் செய்திகள் இணையத்திலிருந்து உங்களுக்கு வரும் வரை Silent Circle-ஆல் மறைத்து வைக்கப்படுவதும் இதன் தனிச்சிறப்பு. இதற்கு சேவைக் கட்டணமாக $10 டாலர் வசூலிக்கிறார்கள். சேவைகளின் தரத்தையும், எண்ணிக்கையும் பொருத்து கட்டணங்கள் மாறுபடலாம்.

Silent Circle இயங்கும் முறை:




அடுத்தது enlocked, இமெயில் மற்றும் கோப்புகளை பாதுகாப்பாக அனுப்ப உதவும் இந்த தளம் , உங்கள் இமெயில் செய்திகளை கொத்துபுரோட்டாவாக மாற்றி அனுப்புகிறது. முதலில் enlocked மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணிணி அல்லது அலைபேசியில் நிறுவி கொள்ளவேண்டும், இப்பொழுது, உங்கள் இமெயில் கணக்கை இதனுடன் இணைத்துவிட்டால் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் மறையீடு செய்யப்பட்டு அனுப்பப்படும், நடுவில் யாரேனும் மடக்கி பிரித்து படித்தாலும் ஆங்கிலோ-இந்திய மாணவர்கள் தமிழ் நாளிதளைப் பார்ப்பது போல் ஒன்றும் புரியாமல் முழிக்க வேண்டியதுதான். தகவல் பெருபவரிடம் enlocked மென்பொருள் இல்லையெனில் அவர்களுக்கு enlocked-ஐ தரவிறக்கிக் கொள்ளும்படி செய்தியைக் காட்டும். தகவல்களை மறையீடு செய்ய OAuth என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள்.
சாதாரண மக்களும் உபயோகிக்கும் வண்ணம் புரட்சிகரமான இந்த் இரு தொழில்நுட்பங்களும் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையப்போவது நிச்சயம். நம் தனிமையையும், சுதந்திரத்தையும் திருப்பி அளிக்கும் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அனைத்து மக்களின் பொருளாதார சக்திக்கும் உட்பட்டு சேவை அளித்தால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவது குறித்து கவலையின்றி இணையத்தில் உலவலாம்.

Wednesday, 3 July 2013

உலகத்தையே ஒட்டுக் கேட்கும் அமெரிக்கா!


சென்ற பதிவில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் Prism Project-ஐ பற்றி ஒரு வரியில் பார்த்தோம். ப்ரிசம் எப்படி ஒளியின் மூலத்தை ஏழு பகுதிகளாக பிரித்து காட்டுகிறதோ, அது போல ஒரு தனி மனிதனின் பலதரப்பட்ட தகவல்களை பிரித்துக் காட்டி(கொடுப்பது)யபடி இருப்பதே இதன் நோக்கம்.உங்களின் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கும் இது கிட்டத்தட்ட ஒரு மறைந்திருக்கும் உளவாளி போன்றது.


Sunday, 23 June 2013

இந்தியாவின் அடையாள அட்டை.

ராம் தனியார் நிறுவன ஊழியர். அலுவலகத்திலிருந்து வந்தவுடன் வாசலில் கிடந்த கடிதத்தை எடுத்திக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றார். குளித்துவிட்டு அரசாங்க முத்திரையோடு வந்திருந்த கடிதத்தை பிரித்து படித்தார். "வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு எங்கள் அலுவலகத்திற்கு வரவும்" என ஏதோ வேற்று கிரக மனிதனின் கையெழுத்தைப் போல் அதிகாரி கிறுக்கி வைத்திறுந்தார். வழக்கம் போல் தனது மேலதிகாரியிடம் பொய் சொல்லி விடுப்பு வாங்கிக்கொண்டு வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அரசாங்க அலுவலகத்தில் நுழைந்தார். "ராம் யாருங்க, உள்ளே வாங்க!" மிளகாய் பொடி முகத்தில் பட்ட முகபாவனையுடன் அலுவலக உதவியாளர் அழைத்துவிட்டு சென்றார்.

ராம் உள்ளே நுழைந்ததும் , பத்துக்கு பதினைந்து அறையில் போய் உட்காரச் சொன்னார்கள். பின் ஒரு நீண்ண்ண்ட படிவத்தை கொடுத்து தனது சுய விபரங்களை பூர்த்தி செய்ய சொன்னார்கள். மேட்ரிமோனியல் தளம் கூட இவ்வளவு விவரங்களை கேட்க மாட்டார்கள். தனது பெயர், சொந்த ஊரிலிருந்து, வங்கி கணக்கு, இருப்பிடச்சான்று, கடவுச்சீட்டு எண், அடையாள அட்டை என ஒரு மினி ஜாதகத்தையே கேட்டிருந்தார்கள். கேட்காமல் விட்ட ஒரு சங்கதி எந்த நட்சத்திரத்தில் பிறந்தீர்கள் ?!!. பின்னர் ஒருவர் ஒரு அதி நவீன கருவியுடன் வந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார், மற்றொருவர் அவரின் பத்து கைவிரல் ரேகையயும் பதிவெடுத்தார். மீண்டும் நம்பிக்கையின்றி கண்ணின் கருவிழியும் பதிவு செய்யப்பட்டது. நீங்கள் போகலாம்!. வெளியே வந்தவுடன் அவரைப் போலவே திகிலோடு காத்திருந்த ஒருவர் கேட்டார், "சார் ஆதார் கார்டு எப்ப குடுக்குறாங்க?".

இது ஏதோ ஒரு தனி மனிதன் சம்பந்தப்பட்ட விசயமில்லை, 110 கோடி மக்களின் அன்றாட செயல்கள் இனி தினமும் கண்காணிக்கப்படும். ஒரு தனி மனிதனின் சாதாரண தகவல்களை திரட்ட அரசாங்கத்திற்கு கூட அனுமதி இல்லை , ஆனால் நந்தன் நீல்கேனி தலைமையில் செயல்படும் ஒரு தனியார் அமைப்பு ஒட்டுமொத்த இந்தியாவின் "தனிப்பட்ட" தகவல்களை திரட்டி வருகிறது. நமது வங்கிக் கணக்கு, ஓட்டுனர் உரிமம், வேலை அடையாள அட்டை அனைத்தும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட உள்ளன. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் உங்கள் ஆதார் அட்டையில் ஒரு GPS கருவி இணைக்கப்பட்டு , தேவையானபோது உங்களை செயற்கைகோள் உதவியுடன் ஒரு கும்பல் பின் தொடர்ந்து கொண்டே வந்தால், உங்களின் வங்கி கணக்கை முடக்கி விட்டால், வேலை அடையாள அட்டையை செயலிழக்க செய்துவிட்டால்? இதெல்லாம் மிகைப்படுத்தி சொல்லப்படும் செய்தியாக தோன்றினால், அமெரிக்காவின் PRISM project இதைத்தான் தனது வாழ்நாள் லட்சியமாக செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் (NSA) இந்த போக்கிரித்தனத்தை அடுத்த பதிவில் பார்கலாம். அதுவரை பொறுமை இல்லாதவர்கள் "ENEMY OF THE STATE" திரைப்படத்தை பார்க்கவும்