Saturday 31 August 2013

பதிவர் சந்திப்பு : பிரபல பதிவர்கள்-- புதிய பதிவர்கள் என்ன நடக்கிறது??

இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது. பிரபல பதிவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் புதிய பதிவர்கள் அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்பதைப்போல் வெங்காயம்,வெள்ளைப்பூண்டு(இரண்டும் இந்திய பொருளாதாரத்துடன் மிக நெருக்கம்) என்று பதிவுகளை போட்டு வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் தமிழ்மணம் பக்கம் சென்று பார்த்தால் காம்ரேட் ஆரூர் மூனா செந்தில் ,கனவுகள் ராஜி, தென்றல்” சசிகலா,தமிழ்வாசி” பிரகாஷ், டிடி,வீடு திரும்பல்” மோகன்குமார்,கவிதை வீதி”சௌந்தர்,மதுமதி,கோவை நேரம்”ஜீவா,சுரேஷ்,சங்கவி,(விட்டுப்போனவர்கள் மன்னிக்கவும்... முடியல!) போன்ற பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு பற்றி பல விலாவாரியான பதிவுகளை எழுதி தள்ளிவிட்டனர். ஆனால் புதியவர்களிடம் சொற்பமான பதிவுகளே பதிவர் சந்திப்பு பற்றி வந்திருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரியம் "நாம் புதியவர்கள்" என்ற எண்ணம் தான் என்று நினைக்கிறேன்.  எனவே அதை தூக்கி குப்பை வண்டியில் எறிந்துவிட்டு நாமும் களத்தில் இறங்குவோம்.எதற்காக சொல்கிறேன் என்றால் , ஒருவேளை பதிவுலக வாசகர்களின் கெட்ட நேரம் நாமும் பிரபல பதிவர் ஆகிவிட்டால், "நீ என்ன பிரபல பதிவர், பதிவர் சந்திப்பு பற்றி ஒரு வரியாவது எழுதுனியா? இல்லை என்னைத்தான் பதிவர் சந்திப்புக்கு வர சொன்னியா என்று யாரவாது கேள்வி கேட்டால் "சரிங்க சித்தப்பு இனிமே உங்கள எங்க கண்டாலும் கூப்புடுரேன் -னு" சமாளிக்க வேண்டியதில்லை.எப்படியும் சில வயித்தெரிச்சல் புடிச்சவங்க இந்த சந்திப்பு முடிஞ்சதும் "பதிவர் சந்திப்பு தேவையா? ... பன்னிகுட்டி தேவையா னு " பதிகளை போடத்தான் போறாங்க. அவங்களுக்கு பின்னூட்ட பதில் எழுதுவதற்கு சில விடயங்கள் தெரிஞ்சு வச்சுக்க வேண்டியது அவசியம்.

 சரி புதியவர்கள் என்ன பண்ணலாம். பதிவுகளை வாசிப்பவர்கள் அனைவரும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை அறிந்து வைத்துக்கொள்வது இல்லை. என் நண்பர் வட்டத்தில் பலருக்கு பதிவுலகமே அறிமுகம் ஆகி இருக்கவில்லை என் வலைப்பூ இணப்பை கொடுக்கும் வரை. எனவே பிரபல பதிவர்களின் பதிவர் சந்திப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை நம் வலைப்பூவில் இணைத்திடுவோம். இது இன்னும் இப்படி ஒரு எழுத்துலகம் இருக்கிறது, இங்கும் தரமான எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்பதை பலரும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதில் இன்னுமொரு நல்ல விடயம் சந்திப்புல கறிசோறு வேறு. சந்திப்புக்கு போகும் அல்லக்கையிடம் இரண்டு பாதிரம் கொடுத்து "ஒன்னு உனக்கு, ஒன்னு எனக்கு" என்று இந்த ஒரு நாள் நாமெல்லாம் "அன்னவேரி கண்ணையன்" ஆகலாம்...
எனக்கு பிடித்த இன்னொரு விடயம் பதிவர் சந்திப்பில் புத்தகங்கள் வெளியிடுவது. உதாரணத்திற்கு சாரு , ஜெ.மொ.. இவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் என்ன சொன்னாலும் சாமானியன் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அழிச்சாட்டியம் பண்ணுபவர்களுக்கு மத்தியில், இப்படி புதிய எழுத்துலகம் உருவாவது இந்த் நாசமாபோன கோஷ்டி பூசலை தடுக்க உதவும்.

பதிவர் சந்திப்பு பற்றிய செய்திகள்.
http://www.rahimgazzali.com/2013/08/blogger-meeting-2013.html,

"பதிவர் திருவிழா" திறம்பட ஒருங்கிணைத்து நடத்தும் அனைத்து பதிவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Monday 12 August 2013

The Conjuring - இது சாதாரண திகில் படம் இல்லை...!

திகில் படங்களில் இரண்டு வகை, ஒன்று படுபயங்கர காட்சிகள், வெட்டு குத்து என திரையை ரத்தக்களரி செய்துவிடுவது. மற்றொன்று ஒலி, காட்சியைப்புகள் இவற்றை வைத்தே அடிவயிற்றை கலக்கும் படங்கள். சமீபத்தில் வெளிவந்த "The Conjuring" இரண்டாவது வகை.

Conjuring Image
 டிஸ்கவரி தமிழில் இரவு 11 மணிக்கு "ஹாண்ட்டிங்" என்று ஒரு திகில் தொடரை அவ்வப்பொழுது ஒளிபரப்புவார்கள். பல தொடர்களைப் பார்த்த தைரியத்திலும், எல்லாம் ஒரே கதைதானே என்றும் தெனாவட்டாக போய் உட்கார்ந்தால், வெளியே வரும்போது பேயறந்தது போல் ஆகிவிட்டது. நன்றாக தெரிந்த கதை தான்!. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பெரிய வீட்டை ஒரு அழகான குடும்பம் விலைக்கு வாங்குகிறது, அவர்கள் தங்களது அனைத்து சேமிப்பையும் அந்த வீட்டில் முதலீடு செய்திருப்பதால் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் போக முடியாத நிலை. அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை அழிக்க நினைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள். இந்த கதையை பல படங்களில் - "Excorcist" வகையரக்களில் பார்த்திருந்தாலும் "The Conjuring" வித்தியாசப்படுகிறது. ஐந்து குழந்தைகளுடன் ஒரு குடும்பம் ஃப்ளொரிடாவின் ஒதுக்குபுறத்தில் குடியேறுகிறது. நூறு வருடங்களுக்கு முன் அந்த வீட்டில் வாழ்த்த ஒரு பெண்(சூனியக்காரி) தன் கைக்குழந்தையை சமையலரை கத்தியால் கொன்று விட்டு , அந்த வீட்டிற்கு யார் குடிவந்தாலும் அவர்களை கொன்றுவிடுவதாக சாபமிட்டுவிட்டு தன் நிலத்திலுள்ள மரத்தில் தீயசக்திக்காக தன்னை பலியிட தூக்கில் தொங்கிவிடுகிறள். சில நாட்களில் அந்த வீட்டில் இருக்கும் அவளின் ஆவி ஒவ்வொரு குழந்தையாக தொல்லை கொடுக்கிறது. ஒரு சிறுமியிடம் உங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உடனே அவர்கள் தீயசக்திகளை விரட்டும் எட்வார்ட் தம்பதியின் துணையை நாடுகிறார்கள். அவர்கள் எப்படி அந்த தீயசக்தியை கண்டிபிடிக்கிறார்கள் , அந்த குடும்பத்தை காப்பாறுகிறார்கள் என்பதை (முடிந்தால்) திருட்டு விசிடி-யில் பார்க்காமல் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட படங்கள் வந்த் போதிலும்,"Conjuring " -ல் அட்டகாசமான திரைக்கதையும் எடுக்கப்பட்ட விதமும் இது சாதாரண படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. உதாரணமாக எட்வார்ட் இப்படி பல வீடுகளில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து சாபமிடப்பட்ட பொருட்களை தன் வீட்டு தரைத்தளத்தில் சேமித்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் "இப்படி சாபமிடப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டிலே வைத்திருக்கிறீர்களே" என்று கேட்பதற்கு அதற்கு அவர் சொல்லும்  விளக்கம் "நான் எல்லா துப்பாக்கிகளையும் ஒன்றாக வத்திருக்க விரும்புகிறேன், தனித்தனியே இருந்து அது பல உயிர்களை எடுக்காலாமல்லவா?". ஆவிகளை படம்பிடிக்க அனைத்து  அறைகளிலும் புகைப்படக்கருவிகளைப் பொருத்துவது, ஒலிகளை பதிவு செய்வது, இவற்றை ஆவனமாக்கி பாதிரியாரிடம் நிஜமாகவே அந்த வீட்டில் ஆவி உள்ளது, எனவே பேயோட்டும் நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டும் என கேட்பது ; அனுமதி கேட்கும் போது  பாதிரியார் அந்த குடும்பம் சர்ச்-ல் உறுப்பினர் இல்லையென்றும், குழந்தைகள் ஞானஸ்நானம் செய்யாததால் இதற்கு நேரிடையாக வாடிகன் தான் அனுமதி அளிக்க வேண்டும் என கூறுகிறார்,இப்படி சின்னச் சின்ன விசயங்களையும் கதையில் புகுத்தியுள்ளனர்.. ஒரு உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திகில் படங்களின் வரிசையில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.