Saturday 8 March 2014

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா?

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
காஷ்மீர்!. பேரை சொல்லும்போதே ஒருவித குளுமை ஆட்கொள்ளும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட ஒரு தொன்மையான வளம் செரிந்த நிலப்பரப்பு.இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த தினம் முதல் காஷ்மீரின் சுதந்திரம் பரி போனது. காஷ்மீர் பிரச்சனை பற்றி பலருக்கு விரிவாக தெரிந்திருக்கும், அதைப் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். இதில் காஷ்மீரின் முக்கியமான நிகழ்வுகளை சற்று விரிவாகவே பார்க்கலாம்.

வாராக முல்லை(பாரமுல்லா)
கிட்டத்தட்ட 5000 வருடங்கள் பழமையானது காஷ்மீர். மேற்கே காபுல்(இன்றைய ஆப்கானிஸ்தான்) முதல் கிழக்கே இமைய மலையின் அடிவாரம் முதல் பரவியிருந்தது அப்போதைய காஷ்மீர். "காஷ்யப்" என்ற துறவி காஷ்மீரை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர். இமய மலை முழுவதும் சென்று அருட்பணி ஆற்றியவர். காஷ்மீர் என்றால் சமஸ்கிருத்தில் உலர்விக்கப்பட்ட நிலம் (கா= தண்ணீர்+ஷமீர்=உலர்ந்த நிலம்). கல்ஹானா எழுதிய ராஜதரங்கிணி என்னும் வரலாற்று நூலில், காஷ்யப் வாராக முல்லை மலையை(இன்றைய பெயர் பாரமுல்லா) பிளந்து தண்ணீர் வரச்செய்து பின்னர் தண்ணீர் உலர்ந்ததும் பண்டிதர்களை குடியிருக்கச் செய்ததாக கூறுகிறது. ஜம்மூவின் பெயர் காரணம் சற்று விசித்திரமானது, ஜம்பூலசன் என்னும் அரசன் ஒருமுறை காஷ்மீர் மலைப் பகுதிக்கு வேட்டைக்கு சென்ற போது ஒரே இடத்தில் ஒரு சிங்கமும், ஒரு ஆடும் தவி ஆற்றில் நீர் அருந்துவதைப் பார்த்து பரவசமடைந்து அங்கே ஒரு நகரத்தை தோற்றுவித்தார். அதற்கு, ஜம்பூ என அவர் பெயரையே சூட்டி இருந்தார். பின்னாளில் மருவி ஜம்மு என்றானது.முதலில் பண்டிதர்களும், பிறகு புத்த மதமும் காஷ்மீரில் கால் பதிக்க புத்த கோவில்களும்,விகாரங்களும் காஷ்மீரில் எழுந்தன. கி.மு 250 வரை அசோகரும் பின் மௌரிய வம்சத்தினரும் ஆண்டு வந்தனர். மௌரியர்களைத் தொடர்ந்து குஷான வம்சத்தினர் காஷ்மீரின் மிச்ச வருடங்களை அண்டனர். பண்டிதர்களும், புத்த மதத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த 13-ம் நூற்றாண்டில், சரியாக சொல்வதென்றால் கி.பி 1326-ல் மேற்கில் இருந்து வந்தது வினை. ஷாமிர் என்ற மன்னன் (செங்கிஸ்கானின் வழி வந்தவர்-பேரன் என குறிப்பிடப்படுவார் வரலாற்று ஆசிரியர்களால்) ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் வழியில் உள்ள அத்தனை ஊர்களையும் சூரையாடிவிட்டு காஷ்மீருக்கு வந்தார். எவரும் அதன் அழகில், அமைதி அடைவர், ஆனால் ஷாமிர் மேலும் உற்சாகமடைந்து ஊரை சூரையாட தொடங்கினான்.இப்படியாக இசுலாம் காஷ்மீரில் நுழைந்தது. பின்னர் அங்கு வந்த சுல்தான் சிக்கந்தர்  அங்கு இருந்த மக்களையும், குறு நில ஆட்சியாளர்களையும் இசுலாமிற்கு மாறும்படி பணித்தார். இசுலாம் அல்லாத மற்ற மக்களுக்கு வரி விதிப்புகளும், சிறப்பு சட்டங்களும் இயற்றப்பட்டன.
இவர் காலத்தில் தான், பெர்ஷிய சிற்பக் கலையும், கம்பளி தயாரிப்பும் வளர்ச்சி அடைந்தது. 16-ம் நூற்றாண்டு தொடங்கி பண்டிதர்களும், பவுத்தர்களும் இரண்டாம் தர குடிகள் ஆனர்கள். பின்னர் 18-ம் நூற்றாண்டு முடிவில் அவுரங்கசீப் மறைவிற்கு பின் முகலாய அரசர்களின் பிடி தளர்ந்தது.

1846-ல் ஏற்பட்ட ஆங்கிலோ-சீக்கிய போரின் முடிவில், குலாப் சிங் லாகூர் மற்றும் சில மேற்கு பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு காஷ்மீரை வங்கிக் கொண்டார். காஷ்மீருக்கு அவர் ஆங்கிலேயருக்கு வருடம் இவ்வளவு என்று வரி செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். குலாப் சிங்கிற்கு காஷ்மீர் கிடைத்தது ஒரு சுவையான சம்பவம். அப்போதைய பஞ்சாப், காஷ்மீர் வரை நீண்டிருந்தது. குலாப் சிங் தோக்ரா என்ற மலைவாழ் இனத்தை சார்ந்தவர். ஆங்கிலோ-சீக்கிய போரில் வீரம் காட்டிய குலாப் சிங்கிற்கு காஷ்மீரை பரிசாக கொடுத்தார் பஞ்சாப் அரசர். குலாபிற்கு பின் வந்த ரன்பீர் சிங், இப்போதைய கில்கிட்-பால்டிஸ்தான் வரை கைப்பற்றினார். அதன் பின் காஷ்மீரின் கடைசி மன்னர் ஹரி சிங். காஷ்மீர் இவருக்கு தாத்தா சொத்து. 
ஹரி சிங்
காஷ்மீர் மண்ணிற்கு ஒரு குணம் உண்டு. அங்கு வந்தேரிகள் என்று யாரும் இருந்தது கிடையாது. பண்டிதர்கள் இருந்த போது பவுத்தர்கள் வந்தார்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர். 1900 களில் இங்கிலாந்து பிரித்தாளும் முறையை அறிமுகப்படுத்தியதால் நாட்டில் ஏற்பட்ட சலசலப்பு கூட காஷ்மீரில் இல்லை. ஹரி சிங் ஒரு சுகவாசி மன்னர். மக்கள் எப்படி போனால் என்ன, எனக்கு வரி வந்துவிட வேண்டும், தவிரவும் இவர் இஸ்லாமியர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார். சுதந்திரம் கிடைத்த போது இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் சேர வேண்டும் என்று சொன்னபோது "இது என் தாத்தா சொத்து! வருடம் இவ்வளவு என்று வரி செலுத்துகிறேன். வேண்டுமென்றால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் குறிப்பிட்ட காலம் வரை வரி செலுத்துகிறேன். மற்றபடி யாருடனும் சேர விருப்பம் இல்லை" என்று கூறிவிட்டார்.

இங்கு தான் பிரச்சனை ஆரம்பம். பாகிஸ்தான், முஸ்லிம்கள் அதிகம் இருப்பதால் காஷ்மீர் எங்களுடன் தான் சேர வேண்டும் என்று கேட்டது. மன்னர் இந்து, எனவே இந்தியாவுடன் இணைவதே காஷ்மீரின் எதிர்காலத்திற்கு நல்லது என்று இந்தியா வாதிட்டது. ஆனால் ஹரி சிங், தனது கோடைகால ஜம்மு அரண்மனைக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார். இப்பொழுது பாகிஸ்தான், காஷ்மீரை அபகரிக்க, மேற்கு பகுதி ஆதிவாசிகளான பஷ்டூண்களை காஷ்மீருக்குள் கைபர் கனவாய் வழியாக ஊடுருவ விடுகிறது. இவர்கள் முதலில் நகரங்களை கூரையாட வேண்டும், பின்னால் பாகிஸ்தான் ராணுவம் வந்து நகரை கைப்பற்றிக்கொள்ளும், திட்டம் இது தான். பஷ்டூண்கள் மிகவும் பிந்தங்கிய சமூகம் அப்பொழுது, பாகிஸ்தான் அரசு அவர்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு ஒரு லாரி கொடுத்தனுப்பி முதலில் ஊரை சூரையாடுங்கள், பின்னர் ராணுவத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு நீங்கள் கொள்ளையடித்துக் கொள்ளலாம் என கூறி அனுப்பியிருந்தது. முதலில் பூஞ்ச்,பிறகு முசபராபாத் என அடித்த பிறகு ஸ்ரீநகரை நோக்கி வந்தார்கள். நகரின் அழகும், பொருட்களும் அவர்களின் கண்ணை மறைத்தது. பாகிஸ்தான் ராணுவத்திற்கு தகவல் கூறுவதை மறந்து விட்டு ஊரை கொள்ளையடித்தனர். இது தான் இந்தியாவிற்கு சாதகமாகிப் போனது. உடனே ஹரி சிங், இந்தியாவை உதவும் படி கேட்டுக்கொண்டார். நேரு இந்தியாவுடன் இணையும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டால் ராணுவத்தை அனுப்ப தயார் என்றார். ஹரி சிங், கையெழுத்திட்டார்.

இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம்-1


இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தம்-2

 இந்திய ராணுவம் இறங்கி அடிக்கத் தொடங்கியது. முதலில் ஸ்ரீநகரை கைப்பற்றியது, தாமதமாக சுதாரித்துக் கொண்ட பாகிஸ்தான் ராணுவம் முன்னோக்கி வர, இந்திய ராணுவம் முக்கியமான கணவாய்களை கைப்பற்றியதால் பாகிஸ்தான் ராணுவம் பின் வாங்கியது. பின்னர் 1948-ம் ஆண்டும் இதே போல் ஊடுருவல் நடவடிக்கை எடுத்தது பாகிஸ்தான். இந்த யுத்தத்தில் இந்திய ராணுவம் காஷ்மீரின் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது, இன்னும் சிறிது காலம்  விட்டிருந்தால் முழு காஷ்மீரும் இந்தியாவின் ஆளுகைக்கு வந்திருக்கும் ஆனால் இந்த முறை நேரு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டார். அவர்கள் "line of control" என்று குறிப்பிட்ட பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தை நிலைகொள்ள செய்தனர். பின்னர், காஷ்மீரின் மன்னர் இந்தியாவிற்கு எழுதிக் கொடுத்ததால் சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்க இந்தியாவிற்கு உரிமை உள்ளது, என்று சில தீர்மானங்களை முன்வைத்தது. இது ஐ.நா தீர்மானங்கள் 39 மற்றும் 47 எனப்படும்.
வரையரை 1:


பாகிஸ்தானால் அனுப்பபட்ட பழங்குடிகளும், பாகிஸ்தான் குடிமக்களும் மற்றும் போர் புரியும்  நோக்கத்துடன் வந்திருக்கும் அனைவரும்  காஷ்மீரில் இருந்து வெளியேற வேண்டும். ஊடுறுவல்களையும், காஷ்மீரின் தனித்துவத்துக்கு இழுக்கு ஏற்படும் வகையில் பாகிஸ்தான் நடந்து கொள்ள கூடது.

வரையரை 2:


பாகிஸ்தான் ராணுவமும் ,பழங்குடிகளும் வெளியேறிய பிறகு, சமூக ஒழுங்கை காப்பற்ற தேவையான குறைந்தபட்ச ராணுவத்தையும், காவல் துறையையும் இந்தியா வைத்துக் கொள்ளலாம். பின்னர் அமைது திருப்பிய பிறகு பொது வாக்கெடுப்பை இந்தியா துவக்கி வைக்கவேண்டும். இந்திய ராணுவம் இருப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறி பாகிஸ்தான் அமைதி முயற்சிகளை கைவிட்டது.


இந்தியா 1953 வரை பாகிஸ்தான் ராணுவம் வெளியேறாததால், இந்தியப் பகுதியில் தேர்தல்களை நடத்த தொடங்கியது. இதில் ஒரு வேடிக்கை காஷ்மீர் பூர்வீக குடிகளின் வேட்பு மனுக்கள் தேர்தலில் பெரும்பாலும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஒரு வேளை தப்பித் தவறி அவர்கள் வெற்றி பெற்றால், மறு தேர்தல் நடத்தப் படுகிறது. இதனாலெல்லாம், காஷ்மீர் மக்களுக்கு இந்தியாவின் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கையிழந்துவிட்டனர். அப்பொழுது காஷ்மீரின் ஒப்பற்ற தலைவராக் ஷேக் அப்துல்லா இருந்தார்(இவரை பற்றி தனியாக பார்கக வேண்டும்; உண்மையிலேயே பெரிய ஆள் இவர்). . மதசார்பற்ற சுதந்திர காஷ்மீர் கோரிக்கையை கடைசிவரை காஷ்மீரிகளிடன் கொண்டு சேர்த்தவர்.அதே சமயம் பாகிஸ்தானுடன் சேரக் கூடது என்பதிலும் தெளிவாக இருந்தார். அவர்கள்(உண்மையான காஷ்மீரிகள்; தீவிரவாதிகள் அல்ல) பேராடுவது தனி சுதந்திர காஷ்மீருக்காக. இரண்டு பக்கமும் மனித உரிமை மீறல்கள் நடந்திருக்கின்றன. பண்டிட்களையும், பவுத்தர்களையும் காஷ்மீரில் கிட்டத்தட்ட அகதிகளைப் போல் மாற்றிவிட்டனர். பாகிஸ்தான் ஆக்கிறமிப்பு காஷ்மீர் பகுதியில் தன்னாட்சி உரிமை என்று மக்களை ஏமாற்றி அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் அல்லாட வைத்துள்ளனர். இந்தியப் பகுதியிலோ, காலம் காலமாக வாழ்ந்து வந்த பண்டிதர்கள் விரட்டப்பட்டனர். 





ஐ.நா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள முக்கியாமான விடயம், காஷ்மீரின் தனித்துவத்தை பாதிக்காத வண்ணம் அமைதி நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே. இன்றுவரை இந்தியா இதனை காப்பாற்றி வருகிறது. எந்த ஒரு வேற்று மாநில மக்களும் காஷ்மீரில் சொத்துக்களை வாங்க முடியாது.காஷ்மீருக்கு தனி சிறப்பு சட்டம். ஆனால் பாகிஸ்தனிலோ, அங்கு செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு பயிற்சி அளிப்பத்ற்காகவே "ஆசாத் காஷ்மீர்" பகுதி உள்ளது. லஷ்கர் முதல் பலதரப்பட்ட தீவிரவாத குழுக்கள் முசாபராபாத்தில் இயங்கி வருகின்றன. பாகிஸ்தானின் மற்ற பகுதிகளில் இருந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் பெருமளவு குடியேற்றங்கள் நடக்கின்றன. 

முஸ்லிம்களுக்கு பல சலுகைகள் தரப்படுகின்றன. சீனாவின் ஜிஞ்சியாங்க் மாகாநத்திற்கு காரகோரம் மலைப்பாதையை பாகிஸ்தான் சீனவுடன் இணைந்து அமைத்துள்ளது. அதைப் பற்றிய எனது முந்தைய பதிவு இங்கே.


இப்பொழுது பாகிஸ்தானின் காஷ்மீர் பகுதியில் சற்றே பாகிஸ்தான் சார்பு நிலையும் இந்தியப் பகுதியில் இந்தியா எதிர்ப்பு நிலையும் அடைந்துள்ளது. இதனால் தான் இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

கில்கிட்-பால்டிஸ்தான் பகுதி பாகிஸ்தானின் முக்கியமான் நீராதாரம் நிறைந்தது மற்றும் பல்வேறு இயற்கை வளங்கள் அங்கு உள்ளது, குறிப்பாக இயற்கை எரிவாயு. இதனால் தான் சீனா இங்கே ஆர்வம் காட்டி வருகிறது. 

இதையெல்லாம் வைத்து பார்த்தால் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா என்று தோன்றவே செய்கிறது.
"பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்களில் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், திருத்திக் கொள்கிறேன்"

6 comments :

  1. எது நடந்தாலும் அமைதி ஏற்படுவதே முக்கியம்...

    ReplyDelete
    Replies
    1. அமைதி ஏற்படும் என நம்புவோம்.. வருகைக்கு நன்றி... :)

      Delete
  2. கிருஷ்ணா,

    //கிட்டத்தட்ட 5000 வருடங்கள் பழமையானது காஷ்மீர். மேற்கே காபுல்(இன்றைய ஆப்கானிஸ்தான்) முதல் கிழக்கே இமைய மலையின் அடிவாரம் முதல் பரவியிருந்தது அப்போதைய காஷ்மீர். "காஷ்யப்" என்ற துறவி காஷ்மீரை உருவாக்கியவர்களுள் முக்கியமானவர்.//

    வரலாறாக இல்லாமலும்,புராணமாகவும் இல்லாமலும் கலந்துக்கட்டி சொதப்பி வச்சுட்டிங்களே அவ்வ்!

    காஷ்யப் உருவாக்கினதா சொல்வதெல்லாம் புராணம்.

    அப்புறம் காபுலில் இருந்து கிழக்கே எங்கோ இமயமலை அடிவாரம் வரையெல்லாம் எக்காலத்திலும் காஷ்மீர் நீளவில்லை.

    ஶ்ரீநகரை விட்டு கீழ பள்ளத்தாக்கு இறங்கினாலே வேற நாடு, ஜம்மு என்பது தனி நாடு.

    டெல்லி சுல்தான்களின் கீழே , ஸ்லேவ் டைனாஸ்டி அப்பவே இருந்தது. சிரிநகர் பகுதி தான் தனியாக இருந்தது. மற்றவை சுல்தான்களின் கீழ் இருந்தது.

    கோரி, இல்டாமிஷ், பால்பன், துக்ளக், லோடிகள் பின்னர் பாபர், அக்பர்னு எல்லாம் விட்டுவிட்டு அவுரங்க சீப்புக்கு போய் , குலாப் சிங்கிற்கு போயிட்டிங்களே அவ்வ்!

    //கல்ஹானா என்னும் வரலாற்று நூலில், //

    கல்ஹனர் எழுதிய ராஜ தரங்கிணி என்ற புராண நூலில்!

    கல்ஹணர் எழுதியவர் பேரு.

    #//1846-ல் ஏற்பட்ட ஆங்கிலோ-சீக்கிய போரின் முடிவில், குலாப் சிங் லாகூர் மற்றும் சில மேற்கு பகுதிகளை விட்டுக் கொடுத்துவிட்டு காஷ்மீரை வங்கிக் கொண்டார். காஷ்மீருக்கு அவர் ஆங்கிலேயருக்கு வருடம் இவ்வளவு என்று வரி செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம். குலாப் சிங்கிற்கு காஷ்மீர் கிடைத்தது ஒரு சுவையான சம்பவம். அப்போதைய பஞ்சாப், காஷ்மீர் வரை நீண்டிருந்தது. குலாப் சிங் தோக்ரா என்ற மலைவாழ் இனத்தை சார்ந்தவர். ஆங்கிலோ-சீக்கிய போரில் வீரம் காட்டிய குலாப் சிங்கிற்கு காஷ்மீரை பரிசாக கொடுத்தார் பஞ்சாப் அரசர்//

    மகாராஜா ரஞ்சித் சிங்க் காலத்தில் ,ஒருப்படைத்தளபதியாக இருந்து ,காஷ்மீர் பகுதிகளை நிர்வகித்தவர் தான் குலாப் சிங்க்.

    ஆங்கிலோ சீக் வார் எல்லாம் அப்ப நடக்கலை, ரஞ்சித் சிங்க் இறந்த பின் சீக்கிய அரசாட்சியை ஒடுக்க ,ஆங்கிலேயர்கள் போர் புரிந்தது தான் ஆங்கிலோ சீக் வார்.

    அப்போ குலாப் சிங்க் ,கட்சி மாறி ஆங்கிலேயர் பக்கம் சேர்ந்துக்கிட்டு சீக்கியர்களுக்கு எதிராக போர் புரிந்து சீக்கியர்களை தோற்கடிக்க உதவினார், அதாவது துரோகம் செய்தார்.

    அதற்கு பரிசாக வரிக்கட்டிட்டு ராஜாவாக இருந்துக்க என ஆங்கிலேயர்கள் அனுமதித்தனர்.

    மகாராஜா ரஞ்சித் சிங்க் இருந்த வரைக்கும் வெள்ளைக்காரன்கள் கதையே வேகலை, அவரைப்பார்த்து பயந்துகிடந்தாங்க.

    குலாப் சிங்க் உதவியுடன் ,ரஞ்சித் சிங்க் ஆதரவாளர்களை அடக்கிட்டு,அவர் மகனை இங்கிலாந்துக்கு அழைத்து சென்று ,இங்கிலாந்து குடிமகனாக்கி ,வெள்ளைக்காரப்பெண்ணையும் மணக்க வைத்தனர், அவர்களுக்கு பிறந்த மகன் பேரும் ரஞ்சித் சிங்க் என்ற பெயரில் அழைத்தனர். அவர் தான் இந்திய வழியில் டெஸ்ட் கிரிகெட் ஆடிய முதல் நபர், ஆனால் இங்கிலாந்து குடிமகனா. அவர் பேரால் தான் இந்தியாவில் "ரஞ்சி டிராபி" மேட்ச் நடத்துராங்க. அவரது சகோதரர் துலீப் சிங்க் அவரும் கிரிக்கெட் ஆடினார் ,எனவே இன்னொரு கிரிக்கெட் போட்டிக்கு துலீப் டிராபி என்று பெயர்.

    # நீங்க ஏதோ பாகிஸ்தான்காரன் தளத்துல இருந்து தகவல் எடுத்துட்டிங்க போல ,பலவும் முரணாக இருக்கு.

    முதல் புத்த மாநாடே காஷ்மீரில் தான் நடந்தது, அசோகருக்கு முன்னரே ,புத்த நாடாக இருந்தது. சந்திரகுப்தரின் ஆளுகைக்கு உட்பட்டது. அவரது பேரன் தான் அஷோகர்.

    இன்னும் நிறைய இருக்கு, சொன்னால் இழுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வவ்வால்..வருகைக்கு நன்றி... :)

      ராஜதரங்கினி -கல்ஹனர் மாற்றி விடுகிறேன்.

      குலாப் சிங், ரஞ்சித் சிங் பற்றி எழுதும் போதே சிறிய சந்தேகம். ஆனால் நினைவில் இருந்து எழுதியதால் இந்த குழப்பம். ஆனால் நல்லவேளை ரஞ்சித் சிங்(ஒரிஜினல்) பெயரையும் இழுத்து வைக்கவில்லை.
      தோக்ரா இனத்தவருக்கு ஆங்கிலேய உதவி தேவைப்பட்டது, ஆங்கிலேயருக்கும் அப்படியே. எனவே பர்ஸ்பரம் உதவிக் கொண்டனர். ஆனால் பெரிய விலை கொடுக்க வேண்டியாகிவிட்டது.

      பண்டிதர்கள் காலத்தில் பல பகுதிகளை நிர்வகித்தனர். ஜம்மு என்பதே பின்னாளில் உருவான ஒரு நகரம்.

      //நீங்க ஏதோ பாகிஸ்தான்காரன் தளத்துல இருந்து தகவல் எடுத்துட்டிங்க போல ,பலவும் முரணாக இருக்கு.//

      இல்லை... விக்கி தான்

      Delete
  3. காஷ்மீர் பற்றிய விபரமான கட்டுரை.
    வாக்கெடுப்பு என்பது தேவையற்றது.
    பொது வாக்கெடுப்பு என்பது மதவாதம் இனவாதம் நிரம்பிய பகுதிகளில் ஒரு கேலி கூத்து

    ReplyDelete
    Replies
    1. வாங்க வேகநரி. வருகைக்கு நன்றி... :)

      //பொது வாக்கெடுப்பு என்பது மதவாதம் இனவாதம் நிரம்பிய பகுதிகளில் ஒரு கேலி கூத்து//

      ஆம், மதச்சார்பற்ற காஷ்மீர் அமைய சூழல்கள் பெரிதும் இப்போது மாறிவிட்டன.
      இப்போதைக்கு காஷ்மீரிகளின் மனநிலை கண்டிப்பாக இந்தியாவிற்கு சாதகமாக இல்லை...

      Delete